Thursday 21 July 2016

மூன்றாவது கண் என்பது ஞானம். ஞானம் என்பது அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது. இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம் இன்று அதற்கான கருவியை ஸ்தூல உடலில் துருவித் துருவி கண்டுபிடித்திருக்கிறது. நம் மனித உடலில் மூளையின் இரண்டு அரைக் கோள வடிவங்களுக்கு அடியே, நடுவில் ஒரு சிறிய கொண்டை கடலை அளவில், கூம்பு வடிவத்தில் காணப்படும் பீனியல் சுரப்பிதான் அது. முன்பு நெற்றிப் பொட்டிற்கு உட்பிறம் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் தலைமை சுரப்பி என்றும், அதுதான் மூன்றாவது கண் என்றும் விளக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த விஞ்ஞானக் கருத்து அடியோடு மாறி விட்டது. இப்பொழுது பீனியல் சுரப்பிதான் அது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது சிறியதாக இருந்தாலும் கண் போன்ற அமைப்பு கொண்டு விளங்குகிறது. இதன் வெளிப்புறத்தில் ஒரு பளிங்கு லென்ஸ் இருக்கிறது என்றும், அதனுள்ளே ஒளி புகும் தன்மையுடைய vitreous எனப்படும் ஜெல்லி நிறைந்திருக்கிறது என்றும் ஆராய்ந்து கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள்.
இது தவிர ஒளிக் கூருணர்வு கொண்ட செல்கள் நிறைந்த விழித்திரையும், இரத்தநாளப் படலங்களும், தனி நரம்பும் இருக்கிறது. மேலும், பெரு மூளையில் மட்டுமே காணப்படும் அஸ்ட்ரோசைஸ்டுகள் இதிலும் உள்ளன. இது ஒரு வித ஹார்மோன்களை உற்பத்தி செய்து மூளையின் பகுதிகளான ஹைப்போதாலமஸ், ஹைப்போபிசிஸ் கூட்டு அமைப்பின் மீது வினை புரிகின்றது. உடல் வளர்ச்சியின் தரத்தை நிர்ணயம் செய்கின்றது. பிட்யூட்டரி சுரப்பியுடன் கூட்டாகச் செயல் புரிகின்றது. அட்ரினல், தைராயிடு சுரப்பிகளின் பணிகளைப் பாதுகாக்கிறது. நீர், உப்பின் சம நிலை, சர்க்கரை அளவு, குருதியின் அமைப்பு, உணவு செரிமாணம், பாலின உறுப்புகளின் வளர்ச்சி, பாலின நடவடிக்கைகள் அனைத்தும் நடவடிக்கைகளும் இதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. மன நடவடிக்கைகளின் முழுமையான தன்மையை இதுதான் நிர்ணயிப்பதாகச் சொல்கிறார்கள். உடலின் தட்ப வெப்ப நிலைகளைச் சீராக வைக்கிறது. மெலடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து சருமத்தின் நிற மாற்றங்களுக்குக் காரணமாகவும் அமைகிறது. வெளிப் புறத்தில் நடைபெறும் அனைத்தும் இதற்கு முன் கூட்டியே தெரிந்து விடும் என்று சொல்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இதுதான் ஆன்மா இருக்கும் இடம் என்றும், உடலையும் உள்ளத்தையும் இணைக்கும் இணைப்பு என்றும் சொல்கிறார்கள். முன் ஜென்ம வினைகளின் கருவூலம் என்றும், பின் வரும் பிறவிகளுக்கான வித்து இங்குதான் உள்ளது என்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இதையே மனோன்மணி என்றார்கள். அவர்கள் இதை அருட் சுரப்பி என்கிறார்கள். இது சிறப்பாக இயங்கினால் ஞானம் விளையும் என்கிறார்கள். ஆழ்நிலை தியானம், குண்டலினி யோகம் போன்ற யோகங்களின் மூலம்தான் இதைத் தூண்டுதல் செய்ய முடியும். தமிழ் எழுத்துகளில் உள்ள ”ழ” என்ற எழுத்தை சரியாக உச்சரிப்பவர்களுக்கு இந்த சுரப்பி தூண்டப்படும். நாக்கை மடித்து அன்னாக்கில் வைக்கும் பொழுது இந்த சுரப்பி தூண்டப்பட்டு அறிவு, மனோ சக்திகள் மேம்படுகின்றன. சகஸ்ராரச் சக்கரத்தோடு நேரடியான தொடர்புடையதாக இந்த சுரப்பி விளங்குகிறது. இங்கிருந்துதான் அமிர்தம் எனப்படும் சோம்பானம் சுரக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. எனவே இதுதான் மூன்றாவது கண் என்றும், அதற்கான ஸ்தூலக் கருவி என்றும் இரண்டு வித கருத்துகள் உள்ளன.

1 comment: